முகப்பு
இந்தியா

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்? பணம் திருப்பியளிக்கத் திட்டம்?

எல்பிஜி தட்டுப்பாட்டால் ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது பற்றி...

Updated On : 11 மார்ச், 2026 at 11:26 AM
கோப்புப்படம்
பகிர்:

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரயில்களிலும் உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் கேஸ் சிலிண்டர் பெறவும் பெட்ரோல் நிலையங்களில் ஆட்டோக்கள் கேஸ் நிரப்பவும் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுளளதால் நேற்று முதலே உணவக நிறுவனங்கள் தங்கள் தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்து வருகின்றனர். பல ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டு விலையேற்றம் செய்யப்படுகிறது. இதனால் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்களிலும் உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்லும் ரயில்கள், வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்களில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எரிவாயு தட்டுப்பாட்டால் ரயில்களில் உணவு கொடுக்க நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. ரயில் நிலையங்களில் உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ரயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள், உணவு விற்பனை கடைகளுக்கு ஐஆர்சிடிசி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கேஸ் சிலிண்டருக்குப் பதிலாக மைக்ரோவேவ் ஓவன், இண்டக்ஷன் ஸ்டவ் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் சமைத்த உணவுகளை இருப்பில் வைக்கவும் இருப்பு இல்லை என்றால் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை வழங்க அறிவுறுத்தியுள்ளது.

அதாவது சமைத்த உணவுகளை பயணிகளுக்கு வழங்கமுடியாவிட்டாலும் அவர்களுக்கு சிரமத்தைக் குறைக்கும் வகையில் எப்போதும் சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் பேக்கிங் உணவுப் பொருள்களை வழங்க வேண்டும், அந்த வகையான உணவுகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது .

ரயில்களில் உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ரயில்களில் உணவு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது உணவும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு உணவுக்கான பணத்தைத் திரும்பக் கொடுப்பது குறித்தும் ரயில்வே பரிசீலித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஐஆர்சிடிசி-யின் கீழ் ரயில்களில் தினமும் சுமார் 17 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

summary

LPG Crisis In India: IRCTC Warns Of Possible Train Meal Disruptions, Passengers To Get Refunds

முழு கட்டுரையைப் படிக்க →