சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சிஎன்ஜி நிரப்புவது உயிருக்கே ஆபத்தா?
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சிஎன்ஜியை நிரப்புவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை
ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜியை சமையல் எரிவாயு சிலிண்டர்களில் மக்கள் நிரப்புவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு பீதியில் ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜியை சமையல் எரிவாயு சிலிண்டர்களில் (எல்பிஜி) நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்கின்றனர்.
ஆனால், ஆட்டோக்களுக்கான சிஎன்ஜியை வீட்டுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது ஆபத்தை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எல்பிஜியும் சிஎன்ஜியும் ஒரே எரிபொருள் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றாலும், இரண்டிலும் பயன்பாடும் பாதுகாப்பு அமைப்புகளும் வெவ்வேறானவை. இரண்டும் ப்ரோப்பேன் (C₃H₈) மற்றும் பியூட்டேன் (C₄H₁₀) என்ற ஹைட்ரோகார்பன் வாயுக்களின் கலவையே.
வீட்டுப் பயன்பாட்டு எல்பிஜி, சமையலுக்காக வடிவமைக்கப்பட்டு 14.2 கிலோ சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு, குறைந்த அழுத்தத்டிஹ்ல் ரெகுலேட்டர் மூலம் அடுப்புக்கு வழங்கப்படுகிறது.
ஆனால், ஆட்டோ சிஎன்ஜி, வாகன எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதால், உயரழுத்த டேங்குகள், எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகள், பல பாதுகாப்பு வால்வுகள் மூலம் இயந்திரத்துக்கு அனுப்பப்படுகிறது.
மேலும், வீட்டு எல்பிஜியில் ப்ரோப்பேன் - பியூட்டேன் கலவையானது 40:60 என்ற விகிதத்தில் இருக்கும். இது சமையலுக்கான நிலையான தீப்பற்றலை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஆட்டோ சிஎன்ஜியில் ப்ரோப்பேன் - பியூட்டேன் கலவையானது 60:40 என்ற விகிதத்தில் இருக்கும். இது வாகன இயந்திர எரிப்பை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.
எல்பிஜியின் அடர்த்தியும் சிஎன்ஜியின் அடர்த்தியும் வெவ்வேறானவை என்பதால், அழுத்தம் காரணமாக சிலிண்டர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, அதிக அழுத்தத்தில் ஆட்டோ சிஎன்ஜியை வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களில் நிரப்பிப் பயன்படுத்துவது என்பது, தீப்பற்றல் அல்லது வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து, காயங்கள் அல்லது உயிரிழப்பு அபாயத்தைக்கூட ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி, வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர்களில் சிஎன்ஜியை நிரப்புவது என்பது சட்டப்படி குற்றமும்கூட.