சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு! 11 நாள்களில் 4-வது முறை!!
கடந்த 11 நாள்களில் சிஎன்ஜி எரிவாயுவின் விலை 4-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளதைப் பற்றி...
கடந்த 11 நாள்களில் சிஎன்ஜி எரிவாயுவின் விலை 4-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டிருந்தாலும், போரின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
Advertisement
Advertisement
எரிபொருள் விநியோகம் குறைந்ததன் தாக்கம் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் எதிரொலித்தது.
இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயுக்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
கடந்த மே 15 ஆம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வாகன எரிபொருள்களில் ஒன்றான சிஎன்ஜியும் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கலக்கமடைந்துள்ளனர்.
சென்னையில் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2 உயர்ந்து ரூ.93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய தலைநகர் தில்லியில், கடந்த மே 15 ஆம் தேதி சிஎன்ஜி கிலோவுக்கு ரூ.2-ம், அதைத்தொடர்ந்து 22 ஆம் தேதி கிலோவுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டது. கடந்த 11 நாள்களில் மட்டும் சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.7 அதிகரிக்கப்பட்டுள்ளது.
டாக்ஸி போன்ற வாகனங்கள், ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜியின் விலை உயர்வால், டிராவல் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.