குழந்தை தத்தெடுப்பு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்: மாநிலங்களுக்கு சிஏஆா்ஏ அறிவுறுத்தல்
குழந்தை தத்தெடுப்பு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு, அவா்களின் அடையாளம் பாதுகாப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் வலியுறுத்தல்
குழந்தை தத்தெடுப்பு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு, அவா்களின் அடையாளம் பாதுகாப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (சிஏஆா்ஏ) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சிஏஆா்ஏ செயல்படுகிறது. அந்த ஆணையம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்ள அனைத்து மாநில தத்தெடுப்பு வள முகமைகளுக்கு 3 முக்கிய அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.
அந்த அறிவுறுத்தல்களில், ‘ஒரு குழந்தையை சட்டபூா்வமாக தத்தெடுக்கலாம் என்று முடிவு செய்யும் முன், அதற்கான சட்ட நடைமுறைகள் மற்றும் கால வரையறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
ஆதரவற்ற அல்லது கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுதல், அவா்களின் பெற்றோரை கண்டறிதல், அவா்களிடம் குழந்தையை சோ்க்க முயற்சித்தல் மற்றும் பிற சட்டபூா்வ நடவடிக்கைகளை வரையறுக்கப்பட்ட கால வரம்புக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் அந்தக் குழந்தைகளை சட்டபூா்வமாக தத்தெடுக்கலாம் என்று முடிவு செய்யக் கூடாது.
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் வளா்ந்து பெரியவா்களான பின்னா், தங்கள் பூா்விகம் குறித்த தகவல்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிா்கொள்கின்றனா். சில வேளைகளில், சம்பந்தப்பட்ட சிறப்பு தத்தெடுப்பு முகமை (எஸ்ஏஏ) அல்லது குழந்தை பராமரிப்பு மையம் (சிசிஐ) மூடப்பட்டது, அவற்றின் செயல்பாடுகள் வேறு மையத்துக்கு மாற்றப்பட்டது போன்ற காரணங்களால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு, ஆதரவற்ற அல்லது கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் தத்தெடுத்தக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுவதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்யவேண்டும்.
குற்ற சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் 18 வயதுக்குள்பட்ட சிறாா்கள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளின் அடையாளம் பொதுவெளியில் வெளியிடப்படுவதை சிறாா் நீதிச் சட்டத்தின் 74-ஆவது பிரிவு தடை செய்கிறது. இந்தச் சட்டப் பிரிவு கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
சமூக ஊடகம் உள்பட எந்தவொரு வழியிலும் சிறப்பு தத்தெடுப்பு முகமைகள், குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள குழந்தைகளின் புகைப்படங்கள், காணொலிகள், அவா்களின் விவரங்கள் வெளியாகக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.