போலீஸில் புகார் அளித்த மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்ற கணவன் கைது!
ரயில் நிலையத்தில் குடும்பத் தகராறு: மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிக் கொன்ற கணவன் கைது!
மும்பை : ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் வசித்து வந்த ராஜுகுமார் குப்தா(42) - புஷ்பா குப்தா(36) என்ற தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னைக் கொடுமைப்படுத்தும் கணவருடன் இனி வாழ முடியாது என புஷ்பா தனது சகோதரரிடம் அழுது புலம்பியதாகவும் அதையடுத்து அவரை உத்தரப்பிரதேசத்திலுள்ள தமது வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவரது சகோதரர் மும்பைச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை புஷ்பாவையும் அவரது மகனையும் அழைத்துக்கொண்டு மும்பையின் முலுந்த் ரயில் நிலையத்துக்கு அவரது சகோதரர் சென்றிருக்கிறார். இதனிடையே வீட்டிலிருந்து புறப்படும் முன், புஷ்பாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. அதன் வெளிப்பாடாக, தனது கணவன் மீது புஷ்பா அருகிலுள்ளதொரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் அவர் தமது மகன், சகோதரருடன் ரயில் ஏறச் சென்றிருக்கிறார்.
இதனிடையே பதற்றத்தில் தமது அடையாள அட்டையை புஷ்பாவின் சகோதரர் புஷ்பாவின் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதை எடுத்து வர புஷ்பாவின் மகனை மட்டும் அழைத்துக்கொண்டு அவர் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டிலிருந்த புஷ்பாவின் கணவர் அவர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்களை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு ரயில் நிலையத்துக்கு விரைந்தார்.
அங்கு புஷ்பாவைக் கண்டதும் ஆத்திரமடைந்த அவர், மீண்டும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் அவர் தனது மனைவியை அவ்வழியாகச் சென்ற ஒரு ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்றார். அதில் புஷ்பா படுகாயமடைந்து இறந்தார்.
அதனைத்தொடர்ந்து வீட்டுக்கு தப்பிச் சென்ற அவர் தமது மகனை அழைத்துக்கொண்டு தலைமறைவானார். இந்நிலையில், ரயில் நிலையத்தில் பெண் கொலை விவகாரத்தில் வழக்குப்பதிந்து கணவரைத் தேடிய போலீஸார், குஜராத்தின் சூரத்தில் தலைமறைவாக இருந்த ராஜுகுமாரைக் கைது செய்ததாக இன்று(மார்ச் 17) தெரிவித்தனர். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.