முகப்பு
இந்தியா

அரசு உயா் பதவிகளில் இதுவரை 63 நேரடி நியமனங்கள்: மத்திய அரசு

Updated On : 19 மார்ச் 2026, 5:19 am IST
- PTI
பகிர்:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா், இயக்குநா், துணைச் செயலா் உள்ளிட்ட பதவிகளில் நேரடி நியமன நடைமுறையில் இதுவரை 63 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள் தோ்வில் தகுதிபெற்ற ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) அதிகாரிகள் மட்டுமே, அரசின் பல்வேறு துறைகளில் துணைச் செயலா், இயக்குநா், இணைச் செயலா் பதவிகளில் நியமிக்கப்படுவது நடைமுறை.

இந்தச் சூழலில், அரசுத் துறைகளில் தனியாா் துறை நிபுணா்களின் திறன்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறி, தனியாா் துறை நிபுணா்களை நேரடி நியமன முறையில் இந்தப் பதவிகளில் குறுகிய கால அடிப்படையில் (3 ஆண்டுகள்) நியமிக்கும் நடைமுறையை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இவா்களுக்கு யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெறுவது உள்ளிட்ட எந்தத் தகுதியும் தேவையில்லை.

Advertisement

இந்த நேரடி நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன என்பது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக மக்களவையில் புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நேரடி நியமன அடிப்படையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா், இயக்குநா், துணைச் செயலா் பதவிகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தனியாா் துறை நிபுணா்கள் உள்பட 63 போ் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் கடந்த 2019-ஆம் ஆண்டில் 8 பேரும், 2021-இல் 30 பேரும், 2023-இல் 25 பேரும் நியமிக்கப்பட்டனா்.

இந்த நியமனங்கள் அனைத்தும், குறிப்பிட்ட நிபுணத்துவ பணிகளுக்காக அந்தந்த துறைகளில் சிறந்த அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டவையாகும்.

அத்துடன், சண்டீகரின் முதுநிலை மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (பிஜிஐஎம்இஆா்), பேராசிரியா்கள் சங்கத்துக்கும் இடையேயான பணி நியமனம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், இந்த நியமனங்கள் அனைத்தும் ஒரு பதவிப் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டதால், சமூக பிரிவு வாரியான தரவுகள் பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளாா்.