மார்கெரிட்டா தொகுதியில் பிரதீக் போட்டியிடாதது ஏன்? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி காரணமா?
மார்கெரிட்டா தொகுதியில் பிரதீக் போர்டோலாய் போட்டியிடாதது பற்றி..
அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இரண்டு முக்கிய வேட்பாளர்கள் விலகியதையடுத்து அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரத்யுத் போர்டோலாய் காங்கிரஸ் கட்சியில் தனக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது மகன் பிரதீக் போர்டோலாய் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மார்கெரிட்டா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்திருந்தது.
காங்கிரஸ் தலைவர் மற்றும் மத்திய தேர்தல் குழுவின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு புதன்கிழமையன்று எழுதிய கடிதத்தில், தான் தொடர்ந்து கட்சியின் உறுப்பினராகவே நீடிப்பேன் என்று பிரதீக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில் காங்கிரஸ் வெளியிட்ட தனது முதல் வேட்பாளர் பட்டியலில், மார்கெரிட்டா தொகுதிக்கான வேட்பாளராகப் பிரதீக்கை அறிவித்தது. இத்தொகுதியைத்தான் அவரது தந்தை நான்கு முறை சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
தனது தந்தையான பிரத்யுத் போர்டோலாய் காங்கிரஸிலிருந்து விலகியதையடுத்து, மார்கெரிட்டா தொகுதியில் தான் போட்டியிடப்போவதில்லை என பிரதீக் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பிரதீக் கூறுகையில்,
தனது தந்தை வேறொரு கட்சியில் இணைய முடிவெடுத்த பிறகு, மார்கெரிட்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகத் தான் தொடர்ந்து நீடிப்பது பொருத்தமாக இருக்காது.
கட்சியின் மீது மிகுந்த மரியாதையுடனும், ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும், மார்கெரிட்டா சட்டப்பேரவைத் தொகுதியில் எனது வேட்புமனுவை விலக்கிக்கொள்ளும் முடிவை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
மார்கெரிட்டா தொகுதி மக்களும், அர்ப்பணிப்பு மிக்க காங்கிரஸ் தொண்டர்களும் கட்சியின் வேட்பாளர் மீது முழுமையான தெளிவையும் நம்பிக்கையையும் கொண்டிருக்கத் தகுதியானவர்கள் என நான் நம்புகிறேன்.
பாஜக கட்சியின் தலைமை பொருத்தமானதாகக் கருதும் எந்தப் பொறுப்பிலும் தான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று பிரதீக் உறுதிப்படக் கூறினார். மேலும், தனது இந்த முடிவு முழுமையாகக் கட்சியின் அமைப்பின் மீதான எனது மரியாதை மற்றும் காங்கிரஸ் கட்சியின் விழுமியங்களையும் ஒழுக்கத்தையும் காக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது.
மிகச் சிறு வயதிலிருந்தே கட்சியுடன் தனக்கிருந்த தொடர்பை நினைவுகூர்ந்த அவர், அக்கட்சியின் கொள்கைகளே தனது அரசியல் சிந்தனையை வடிவமைத்துள்ளதாகக் கூறினார். மேலும், கடந்த பல ஆண்டுகளாகத் தன்மீது நம்பிக்கை வைத்து ஊக்கமளித்த கட்சித் தலைமைக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய எனது தந்தை, செவ்வாய்க்கிழமையன்று அக்கட்சியிலிருந்து விலகி, மறுநாளே பாஜகவில் இணைந்தார்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.