அஸ்ஸாம்: காங்கிரஸிலிருந்து விலகியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு!
அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸிலிருந்து விலகியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது பற்றி...
அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 2 முக்கிய நிர்வாகிகளுக்கு வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, கடந்த பிப். 22 ஆம் தேதி அஸ்ஸாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா பாஜகவில் இணைந்தார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
தொடர்ந்து கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலாய் நேற்று முன்தினம்(மார்ச் 17) தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நேற்று(மார்ச் 18) முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பிரத்யுத் போர்டோலாய் காங்கிரஸ் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் அஸ்ஸாமில் பாஜக சார்பில் இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வெளியான நிலையில், அதில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பூபென் குமார் போரா, பிரத்யுத் போர்டோலாய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரத்யுத் போர்டோலாய் வரும் தேர்தலில் பாஜக சார்பில் திஸ்பூர் தொகுதியிலும் பூபென் குமார் போரா, தான் ஏற்கெனவே போட்டியிட்ட பிஹ்புரியா தொகுதியிலும் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.
இதனிடையே பிரத்யுத் போர்டோலாயின் மகன் பிரதீக், வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மார்கெரிட்டா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.