எரிபொருள் நெருக்கடி! மத்திய அரசின் கொள்கைகளே காரணம்: கேரள முதல்வர்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குக் காரணம் மத்திய அரசின் கடந்தகால கொள்கைகளே காரணம் என கேரள முதல்வர் கூறியது குறித்து...
இந்தியாவில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குக் காரணம் மத்திய அரசின் கடந்தகால கொள்கைகளே காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். 28 ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதில் தாக்குதலாக ஈரானும் வளைகுடா நாடுகளிலுள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அடுத்தடுத்த மத்திய அரசுகள், அமெரிக்காவின் ஆதிக்கத்தின்கீழ் பின்பற்றிய கொள்கைகளே இந்தியாவில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடிக்குக் காரணம்.
மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் இந்த நெருக்கடியை இன்னும் மோசமாக்கி, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.
கடந்த காலத்தில், முன்மொழியப்பட்ட இந்தியா - ஈரான் எரிவாயு குழாய் திட்டத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு இந்தியா விலகிய முடிவு ஒரு தவறான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பினராயி விஜயன் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சி மே மாதம் 2026 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்த நிலையில், கேரளத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.