கேரள தேர்தலில் வேட்புமனு தாக்கல் விறுவிறு! பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக குஜராத், ராஜஸ்தான் முதல்வர்கள் பிரசாரம்!
குஜராத், ராஜஸ்தான் முதல்வர்கள் முன்னிலையில் பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
திருவனந்தபுரம் : கேரள தேர்தலில் வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை(மார்ச் 21) விறுவிறுப்பாக நடைபெற்றது. அம்மாநிலத்துக்கு குஜராத், ராஜஸ்தான் முதல்வர்கள் வருகை தந்தனர். அவர்கள் முன்னிலையில், கேரள பாஜக தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-இல் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கேரள மாநில பாஜக தலைவரான ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியிலும், முன்னாள் மத்திய இணையமைச்சரான வி. முரளீதரன் திருவனந்தபுரத்தின் கழக்கூட்டம் தொகுதியிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது அவர்களுடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உடனிருந்தார்.
பாஜக வேட்பாளர் பத்மஜா வேணுகோபால் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் முன்னிலையில் இன்று திருச்சூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரான சன்னி ஜோசப், கட்சியின் மூத்த தலைவர்களான கே. முரளீதரன், நடிகர் ரமேஷ் பிஷாரோடி, முன்னாள் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இன்று முறையே தாங்கள் போட்டியிடும் பேராவூர், வத்தியூர்காவு, பாலக்காடு மற்றும் சிறையின்கீழு பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராகவிருந்த, இப்போது கட்சியிலிருந்து விலகியிருக்கும் ஜி. சுதாகரன், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவுடன் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தான் போட்டியிடும் அம்பலப்புழை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநில அமைச்சர்களான பி. ராஜீவ், வி. சிவன்குட்டி, ஆர். பிந்து, பி. ஏ. முகமது ரியாஸ் மற்றும் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்களான கே. கே. சைலஜா, கடக்கம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் முறையே தாங்கள் போட்டியிடும் களமசேரி, நேமம், இரிஞ்சலக்கூடா, பேய்போர், பேராவூர், கழக்கூட்டம் தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அம்மாநிலத்தில் 362 வேட்பாளர்கள் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் திங்கள்கிழமை(மார்ச் 23) என்பதால் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கேரளத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்.), தொடர்ச்சியாக 3-ஆவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க முனைப்பு காட்டுகிறது. எதிரணியில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும்(யூ.டி.எஃப்.) தேசிய ஜனநாயகக் கூட்டணியும் போட்டியிடுகின்றன. இதனால் கேரளத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.