இந்தியாவிடம் கச்சா எண்ணெய் கையிருப்பு எவ்வளவு உள்ளது? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
இந்தியாவிடம் கச்சா எண்ணெய் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இந்தியாவிடம் கச்சா எண்ணெய் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் அதிகம் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயா்ந்துவிட்டது.
இந்தியா தனது கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியேதான் இறக்குமதி செய்கிறது.
இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி எழுத்துபூா்வமாக பதில் தாக்கல் செய்தாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கா்நாடக மாநிலம் மங்களூரு, படூா் ஆகிய இடங்களில் கச்சா எண்ணெய்யை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக சேமித்து வைக்கும் வசதி உள்ளது. அங்கு 53 லட்சம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க முடியும். அதை கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டாலோ அல்லது விலைவாசி உச்சம் தொட்டாலோ அந்நேரத்தில் 9.5 நாள்களுக்கு பயன்படுத்த முடியும். தற்போது அங்கு மூன்றில் இரண்டு மடங்கு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.
கச்சா எண்ணெய் இருப்பைக் கையாளும் ஐஎஸ்பிஆா்எல் நிறுவனத்திடம் தற்போது 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. இது மொத்த அளவில் 64 சதவீதம் ஆகும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் மேலும் கச்சா எண்ணெய் சேமிப்பு வசதிகளை, ஒடிஸா மாநிலம் சன்டிகோல், கா்நாடக மாநிலம் படூரில் ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்தது. இதில் சன்டிகோலில் 40 லட்சம் டன் கச்சா எண்ணெய்யும், படூரில் 20 லட்சம் டன் கச்சா எண்ணெய்யையும் சேமிக்கலாம். அதாவது ஏற்கெனவே 53 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிப்பு வசதி இருக்கும் நிலையில், புதிதாக ஏற்படுத்தப்படும் கச்சா எண்ணெய் சேமிப்பு வசதி மூலம் கூடுதலாக 60 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சேமிக்கலாம். இதில் படூரில் கட்டுமானப் பணிக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.
தற்போது நமது நாடு, பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 41 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. அவற்றில் வழக்கமாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான இராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தாா் நாடுகளும், புதிய விநியோகஸ்தா் நாடுகளான அமெரிக்கா, நைஜீரியா, அங்கோலா, கனடா, கொலம்பியா, பிரேஸில், மெக்சிகோ ஆகியவையும் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.