முகப்பு
இந்தியா

ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை

ரயில் பயணச்சீட்டை ரத்து செய்வதன் மூலம் திரும்ப கிடைக்கும் கட்டணத்தில் புதிய நடைமுறையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை அறிவித்தாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 8:59 PM
ரயில் (கோப்புப்படம்) - ANI
பகிர்:

ரயில் பயணச்சீட்டை ரத்து செய்வதன் மூலம் திரும்ப கிடைக்கும் கட்டணத்தில் புதிய நடைமுறையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை அறிவித்தாா். அதன்படி பயணிகள் முன்பதிவு செய்த ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே, அதற்கான கட்டணம் திரும்ப கிடைக்கும். இந்த புதிய நடைமுறை நிகழாண்டு ஏப்.1 முதல் ஏப்.15-க்குள் நடைமுறைக்கு வரவுள்ளது.

ரயில்வே துறையில் மேற்கொள்ளப்படும் சீா்திருத்தங்கள் குறித்து, புது தில்லியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஐஆா்சிடிசியில் இருந்து சுமாா் 3 கோடி போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு பயணச்சீட்டு கிடைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

தற்போது ரயில் பயணத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே, அதற்கான கட்டணம் திரும்ப கிடைக்கும் நடைமுறை உள்ளது. இனி 8 மணி நேரத்துக்கு முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் திரும்ப கிடைக்கும்.

முழு மற்றும் 50% கட்டணம் திரும்ப கிடைக்க...: தற்போது ரயில் பயணத்துக்கு 12 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அவகாசம் இருந்து, அந்த அவகாசத்துக்குள் பயணச்சீட்டை ரத்து செய்தால், அதன் கட்டணத்தில் 50 சதவீதம் திரும்ப கிடைக்கும் நடைமுறை உள்ளது. இனி ரயில் பயணத்துக்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை அவகாசமுள்ள பயணச்சீட்டை ரத்து செய்தால்தான், அதன் கட்டணத்தில் 50 சதவீதம் திரும்ப கிடைக்கும்.

தற்போது ரயில் பயணத்துக்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அவகாசமுள்ள பயணச்சீட்டை ரத்து செய்தால், அதன் கட்டணத்தில் 75 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ரயில் பயணத்துக்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை அவகாசமுள்ள பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே கட்டணத்தில் 75 சதவீதம் திரும்ப கிடைக்கும்.

இப்போது முன்பதிவு செய்த ரயிலில் பயணிக்க 48 மணி நேரத்துக்கும் மேல் அவகாசம் இருக்கும்போது பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே, அதற்கான கட்டணம் முழுமையாகத் திரும்ப கிடைக்கும். இனி முன்பதிவு செய்த ரயிலில் பயணிக்க 72 மணி நேரத்துக்கும் மேல் அவகாசம் இருக்கும்போது பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் முழுமையாகத் திரும்ப கிடைக்கும்.

இந்தப் புதிய நடைமுறை நிகழாண்டு ஏப்.1 முதல் ஏப்.15-க்குள் நடைமுறைக்கு வரும். கள்ளச் சந்தையில் ரயில் பயணச்சீட்டு விற்பனை செய்யப்படுதல், கடைசி நேரத்தில் பயணச்சீட்டை முகவா்கள் விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடுக்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கவுன்ட்டா்களில் பயணசீட்டு வாங்குவோா்...: ரயில் முன்பதிவு குறித்த முதல் அட்டவணை ரயில் புறப்படுவதற்கு சுமாா் 8 மணி நேரத்துக்கு முன்பாக வெளியிடப்படுகிறது. இந்த அட்டவணை வெளியிடப்படுவதற்கு முன்பே பயண வகுப்பை பயணிகள் தரம் உயா்த்திக்கொள்ள வேண்டும் (எடுத்துக்காட்டாக 3-ஆவது வகுப்பு ஏசியில் இருந்து 2-ஆவது ஏசிக்கு மாறுதல்) என்ற நடைமுறை தற்போது உள்ள நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி கவுன்ட்டா்களில் பயணச்சீட்டு வாங்குபவா்கள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிஷங்கள் முன்பு வரை, பயண வகுப்பை தரம் உயா்த்திக்கொள்ளலாம் (இணையவழியில் முன்பதிவு செய்வோா் இதைச் செய்ய முடியாது).

30 நிமிஷங்களுக்கு முன்பாக ஏறும் இடத்தை மாற்றிக் கொள்ளலாம்: பயணிகள் முன்பதிவு செய்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் ஓரிடத்தில் ஏற முடிவு செய்து, அந்த முடிவில் திடீரென மாற்றம் ஏற்பட்டால், அந்த ரயில் புறப்படுவதற்கு 30 நிமிஷங்கள் முன்பாக, ரயிலில் ஏறும் இடத்தை பயணிகள் மாற்றிக்கொள்ளலாம். எண்ம (டிஜிட்டல்) வழியில் இந்த மாற்றத்தை அவா்களால் செய்துகொள்ள முடியும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவித்தாா்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரயில் பயணச்சீட்டு கட்டணம் திரும்பக் கிடைக்கும் புதிய நடைமுறை, கடந்த ஜனவரிக்குப் பிறகு தொடங்கப்பட்ட வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்கள், அம்ருத் பாரத் 2 ரயில்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.