ரயில் டிக்கெட் ரத்து கட்டண முறையில் மாற்றம்!
ரயில்வே டிக்கெட் ரத்து செய்யும் நடைமுறையில் மாற்றம்...
இந்திய ரயில்வே பயணச்சீட்டுகள் ரத்து செய்யும் நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கான நடைமுறையில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விதிகளில் பயணச்சீட்டை ரத்து செய்வதில் நேரவாரியாக அபராதம் வசூலிக்கப்படும் என்றும் ரயிலில் ஏறும் நிலையங்களை பயணிகள் மாற்றிக்கொள்ள கால அவகாசத்தை வழங்கும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் 15 வரை படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட பயணச்சீட்டு ரத்து செய்யும் நடைமுறை:
1) ரயில் புறப்படுவதற்கு முன்னர் 8 மணி நேரத்திற்குள் பயணச்சீட்டை ரத்து செய்தால் அதற்குரிய கட்டணம் திருப்பித் தரப்படாது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரத்து செய்யவேண்டும்.
2) பயணச்சீட்டை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.
3) ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் பயணச்சீட்டை ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர்த்து பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும்.
4) ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே தற்போதுள்ள நடைமுறையின்கீழ் முழு கட்டணம் திருப்பித் தரப்படும்.
இதனுடன், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை பயணிகள் தாங்கள் ரயில் ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ள இந்திய ரயில்வே அனுமதித்துள்ளது. ரயில் நிலையங்கள் அதிகமுள்ள நகரங்களில் வசிக்கும் பயணிகள் இதன்மூலம் பயன்பெற முடியும்.
தற்போதுள்ள நடைமுறையின்படி, அட்டவணை வெளியாவதற்கு முன்புவரை பயணிகள் ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கான பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கும் நடைமுறையால், தரகர்கள் டிக்கெட்டுகளை அபகரிப்பது கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருத்தப்பட்ட நடைமுறைகள், பயணச்சீட்டு ரத்துசெய்யும் விதிமுறைகளை நெறிப்படுத்துவதையும், பயணிகளுக்குக் கூடுதல் வசதியை வழங்குவதையும், அதே நேரத்தில் முன்பதிவு முறையின் தவறான பயன்பாட்டைக் கையாள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
Indian Railways announced changes to the ticket cancellation process
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.