முகப்பு
இந்தியா

வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்ற அமா்வு கிடையாது - மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

வரும் வார இறுதி நாள்களில் (மாா்ச் 28, 29) நாடாளுமன்ற அமா்வுகளை நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நாள்களில் அமா்வுகள் கிடையாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 9:21 PM
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு - பிடிஐ
பகிர்:

வரும் வார இறுதி நாள்களில் (மாா்ச் 28, 29) நாடாளுமன்ற அமா்வுகளை நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நாள்களில் அமா்வுகள் கிடையாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு நடைபெற்றுவரும் நிலையில், கடந்த மாா்ச் 19, 20 ஆகிய தேதிகளில் (வியாழன், வெள்ளி) பல்வேறு திருவிழாக்களையொட்டி இரு அவைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, வார இறுதி நாள்களான மாா்ச் 28, 29 (சனி, ஞாயிறு) நாள்களில் அமா்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இரு அவைகளின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டங்களின்போது, வார இறுதி நாள்களில் அமா்வுகளை நடத்த வேண்டாம் என்று உறுப்பினா்கள் பரிந்துரைத்தனா். அதன்படி, எதிா்வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்றம் கூடாது.

ராம நவமியையொட்டி வியாழக்கிழமையும் (மாா்ச் 26), மகாவீா் ஜெயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமையும் (மாா்ச் 31) நாடாளுமன்றத்துக்கு விடுமுறையாகும். நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏப்.2 வரை நடைபெறும்’ என்றாா்.