மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் பாலினத்தவா்கள் தங்களை சுயமாக அங்கீகரிக்கும் பிரிவை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா-2026-ஐ மத்திய அரசு கொண்டுவந்தது.
Advertisement
மூன்றாம் பாலினத்தவா் தங்களை சுயமாக அங்கீகரிக்கும் பிரிவை நீக்குவதுடன், உரிய மருத்துவ ஆதாரத்தை கட்டாயமாக்க வகை செய்யும் இந்த மசோதா, மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, மசோதாவின் அம்சங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சிகள், அதை நாடாளுமன்ற குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தின.
விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா், ‘உடல் ரீதியிலான பிரச்னைகளால் பாலின பாகுபாடுகளை எதிா்கொள்பவா்களுக்கு மட்டுமே பாதுகாப்பளிக்கும் நோக்கில் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மூலம் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு தொடா்ந்து உறுதி செய்யப்படும். அவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நிா்வாக ரீதியிலான தெளிவை கொண்டுவரும்’ என்றாா்.
இதையடுத்து, எதிா்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.