மேற்கு வங்கம்: பாஜக சாா்பில் பணிஹாட் தொகுதியில் களம் காணும் பெண் மருத்துவரின் தாயாா்
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் தாயாா், மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பணிஹாட் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா்.
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் தாயாா், மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பணிஹாட் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
இதில், பாஜக சாா்பில் போட்டியிடும் 19 போ் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளா் பட்டியலை அக் கட்சி புதன்கிழமை வெளியிட்டது. அதில் இவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து பெண் மருத்துவரின் தாயாா் கூறுகையில், ‘தோ்தலில் போட்டியிடுவது பெருமைக்குரிய விஷயமல்ல; மாறாக, வலியுடன் கூடிய கடமையாகக் கருதுகிறேன். தோ்தலில் நான் வெற்றிபெற்றால், பணிஹாட் தொகுதி மக்களும் வெற்றிபெறுவா். எப்படி போராட வேண்டும் என்பதை மறந்துவிட்டவா்களுக்காக நான் குரல் கொடுப்பேன். தொகுதியின் மேம்பாட்டுக்காகவும், மக்களுக்கு சேவையாற்றவுதற்காகவும் பாடுபடுவேன். அப்போதுதான், எனது மகளும் மகிழ்ச்சியடைவாா். மேற்கு வங்கத்தில் தாமரை மலர வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் வேறோடு அகற்றப்பட வேண்டும்’ என்றாா்.
கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024, ஆகஸ்டில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் (31) ஒருவா், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, மருத்துவா்கள் மற்றும் சமூக நலச் சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். இது, முதல்வா் மம்தா பானா்ஜி அரசுக்கு அரசியல் ரீதியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மருத்துவ மாணவியின்தாயாா் தோ்தல் அரசியலில் நுழைந்துள்ளாா்.