தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியாவின் ஏ 350-900 ரக விமானம் தரையிறக்கப்பட்டது குறித்து...
ஏர் இந்தியாவின் ஏ350-900 ரக விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் தரையிறக்கப்பட்டது.
தில்லியிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியாவின் ஏ350-900 ரக விமானம், சுமார் ஏழு மணி நேரம் வானில் பறந்த பிறகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு தில்லிக்குத் திரும்பியது.
இந்த எதிர்பாராத சூழ்நிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், பயணிகள் கூடிய விரைவில் லண்டனுக்கான தங்கள் பயணத்தைத் தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த விமான நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
முன்னதாக, மார்ச் 15 ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறை அதே ஏ350-900 ரக விமானம் சந்தித்துள்ளது. அதைத் தொடர்ந்து நியூயார்க்கில் இருந்து தில்லிக்கு இயக்கப்பட்ட அந்த விமானம், அயர்லாந்தின் ஷானன் நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா நிறுவனம் 2024 ஜனவரி முதல் ஏ350-900 ரக விமானங்களை இயக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.