சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள செவிலியர்: ராகுல் நெகிழ்ச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சோனியா காந்தியை கவனித்துக் கொள்ளும் கேரள செவிலியர் குறித்து ராகுல் காந்தி நெகிழ்ச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சோனியா காந்தியை கேரள செவிலியர் அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்வதாக ராகுல் காந்தி நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, கேரளத்தில் காங்கிரஸ் பிரசாரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சோனியா காந்தியை கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் அர்ப்பணிப்புடன் பார்த்துக் கொள்வதாகவும் விடியோ ஒன்றில் ராகுல் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, விடியோவில் ராகுல் பேசியதாவது, "மருத்துவமனையில் என் தாயின் அறையில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். எந்தவொரு மகனைப்போலவும் எனக்கும் என் தாயாரின் உடல்நிலை குறித்து கவலை இருந்தது.
இருப்பினும், ஒரேயொரு விஷயம் மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தது. ஒவ்வொரு மணி நேரமும் என் தாயைப் பரிசோதித்த கேரளத்தைச் சேர்ந்த ஒரு செவிலியர்தான் எனக்கு ஆறுதலாக இருந்தார். ஒவ்வொரு மணிநேரமும் என் தாயைப் பற்றி அவர் விசாரிப்பார். புன்னகையுடன் கைகளைப் பற்றிக்கொள்வார்.
இதுபோல நாடு முழுவதும் எத்தனை மகன்கள், மகள்கள், சகோதரர்கள், சகோதரிகள், தங்களின் மிகவும் கடினமான தருணங்களில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர்களால் ஆறுதல்பட்டிருக்கின்றனர் என்று சிந்தித்தேன்.
இரவில் தூங்குவீர்களா? அல்லது இரவு முழுவதும் வேலை செய்வீர்களா? என்று அந்த செவிலியரிடம் கேட்டேன். அதற்கு, இரவு முழுவதும் வேலை செய்வதாக அவர் கூறினார்.
உலகம் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும்வேளையில், கேரளத்தைச் சேர்ந்த செவிலியர்கள், கேரளமோ தில்லியோ மட்டுமின்றி, நாடு முழுவதிலும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஆறுதல்கூறி, அவர்களின் கைகளைப் பிடித்து, அவர்களை இயல்பாக உணர வைக்கின்றனர். இதுதான் கேரள மாநிலத்தின் ஆன்மா" என்று தெரிவித்தார்.
Congress Leader Rahul Gandhi thanks Kerala’s nurses as Sonia Gandhi responds to treatment in hospital
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.