கர்நாடகம்: எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களுக்கு 5 ஐபிஎல் டிக்கெட்டுகள் இலவசம்?
கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களின் குடும்பத்தினருக்கு ஐபிஎல் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை
கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இலவசமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயானந்த் பேசுகையில், "இந்த மாதம் 28-ல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மாநிலத்தில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் டிக்கெட்டுகள் வழங்கவில்லை. அவர்கள் விஐபி-க்கள் என்பதால், வரிசையில் நிற்க முடியாது.
அவர்களுக்கு தனி இருக்கை அமைப்புகளை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசிடமிருந்து கிரிக்கெட் சங்கம் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால், அவர்கள் எம்எல்ஏ-க்களை மதிப்பதில்லை.
அவர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள், அந்தளவுக்கு அவர்கள் பெரியாளாகி விட்டனர். பணத்தை வாங்கி அனுபவித்து வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா பேசுகையில், "நாங்கள் அவர்களுக்கு 16.32 ஏக்கர் நிலத்தை மாதம் சுமார் ரூ. 1,600-க்கு வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் வசூலிக்கின்றனர். அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது. இருப்பினும், நம்மைச் சுரண்டுகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.