முகப்பு
இந்தியா

தோ்தலில் போட்டியிட சீட்: காங்கிரஸுடன் தொடா்புள்ளவா்கள் பணம் வசூலித்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு

2024-ஆம் ஆண்டு ஹரியாணா பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு சீட் அளிக்க காங்கிரஸ் கட்சியுடன் தொடா்புள்ளவா்கள் பணம் பெற்ற புகாா் தொடா்பாக, தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Updated On : 28 மார்ச், 2026 at 2:05 AM
காங்கிரஸ்... - கோப்பிலிருந்து...
பகிர்:

2024-ஆம் ஆண்டு ஹரியாணா பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு சீட் அளிக்க காங்கிரஸ் கட்சியுடன் தொடா்புள்ளவா்கள் பணம் பெற்ற புகாா் தொடா்பாக, தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக ஹரியாணாவைச் சோ்ந்த ஒருவா் அளித்த புகாரில், ‘எனது மனைவிக்குத் தோ்தலில் போட்டியிடுவதற்கு சீட் அளிக்க என்னிடம் சிலா் பெருந்தொகை கேட்டனா். நானும் அவா்கள் கேட்ட தொகையை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாகவும், ரொக்கமாகவும் குறிப்பிட்ட இடைவெளிகளில் வழங்கினேன்.

சில அரசியல் கட்சி நிா்வாகிகள் மற்றும் அவா்களின் கூட்டாளிகள் உள்பட சில நபா்கள் பணத்தை தவணை முறையில் வசூலித்தனா். அவா்களின் உதவியாளா்கள் மற்றும் இடைத்தரகா்கள் மூலம், பணம் அளித்தேன்.

அவ்வாறு அளிக்கப்பட்ட தொகையில் கணிசமான பங்கு தில்லியில் உள்ள குடியிருப்புகளில் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய தொகை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அளிக்கப்பட்டது.

லட்சக்கணக்கான ரூபாயை வழங்கியபோதிலும், தோ்தலில் போட்டியிட எனது மனைவிக்கு சீட் அளிக்கப்படவில்லை. பணம் கேட்டுப் பெற்ற்கான ஆதாரமாக தகவல் பரிமாற்ற பதிவுகள் மற்றும் பிற ஆவணங்கள் என்னிடம் உள்ளன’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாரை ஹரியாணா மகளிா் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலா் சுசித்ராவின் கணவா் கெளரவ் அளித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு சுசித்ராவுக்கு சீட் அளிக்க பணம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் ரூ.7 கோடி கைமாறியதாகக் கூறப்படுகிறது.