இஸ்ரேலின் நடவடிக்கைகளை எதிர்க்க மோடிக்கு துணிச்சல் இல்லை! - காங்கிரஸ் தாக்கு!
மேற்கு கரை மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என காங்கிரஸ் விமர்சனம்...
மேற்கு கரை மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் அரசு தனது “கிரேட்டர் இஸ்ரேல்” எனும் திட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை எனவும் ஜெய்ராம் ரமேஷ் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை (மார்ச் 28) அன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது:
Advertisement
Advertisement
“கடந்த 4 வாரங்களாக உலகின் பார்வை முழுவதும் ஹோர்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதுதான் உள்ளன.
இஸ்ரேல் (i) காஸா மக்கள் மீதான கொடூரங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது; (ii) தெற்கு லெபனானில் தனக்கான பெரிய இடைநிலை மண்டலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது; (iii) மேற்கு கரையை ஆக்கிரமித்து இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் முடிந்த 2 நாள்களில் தொடங்கின. இதில், அவர் (பிரதமர் மோடி) அங்கு செல்வதற்கு சில நாள்களுக்கு முன்புதான் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை நிலப் பதிவு செய்வதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதனால், லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்களது சொத்துக்களை இழக்க நேரிடும். ஆனால், தனது நல்ல நண்பரான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகக் குரல் கொடுக்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் நிறைவடைந்த 2 நாள்களில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Congress party has said that PM Modi lacks the courage to oppose Israel's actions in the West Bank.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.