முகப்பு
இந்தியா

தவறாக பயன்படுத்தப்படும் ஓபிசி இடஒதுக்கீடு: பாஜக எம்.பி. கருத்தைக் கண்டித்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

ஓபிசி இடஒதுக்கீட்டை சில மாநில அரசுகள் மதத்தின் பெயரில் தவறாக பயன்படுத்துவதாக பாஜக எம்.பி. கே.லக்ஷ்மண் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து, மாநிலங்களவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

Updated On : 30 மார்ச், 2026 at 8:33 PM
மாநிலங்களவை - கோப்புப் படம்
பகிர்:

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை சில மாநில அரசுகள் மதத்தின் பெயரில் தவறாக பயன்படுத்துவதாக’ பாஜக எம்.பி. கே.லக்ஷ்மண் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து, மாநிலங்களவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மாநிலங்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தை எழுப்பிய கே.லக்ஷ்மண், சில மாநிலங்களில் மதத்தின் பெயரில் அந்த இடஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுவதாக சாடினாா்.

‘சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு பிரத்யேகமாக ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுபோல் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுஆய்வுக்கு உள்படுத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.

அவரது பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். கிட்டத்தட்ட அனைத்து எதிா்க்கட்சி எம்.பி.க்களுமே அவையில் இருந்து வெளியேறினா்.

இதை கடுமையாக விமா்சித்த மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா, ‘காங்கிரஸுக்கும், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணிக்கும் நாடாளுமன்ற விவாதங்களின் மீதோ, ஜனநாயக மாண்புகள் மீதோ, அரசமைப்புச் சட்டத்தின் மீதோ மரியாதை இல்லை. நாடாளுமன்ற நடைமுறைகளைத் தொடா்ந்து அவமதிக்கின்றனா். முஸ்லிம்களை வாக்கு வங்கியாக கருதும் எதிா்க்கட்சிகள், அவா்களைத் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றன’ என்றாா்.

30 நிமிஷங்கள் ஒத்திவைப்பு: முன்னதாக, மேற்காசிய நிலவரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா். அவா்களுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகளுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. பிரதமா் மோடி ஏற்கெனவே இரு அவைகளிலும் விளக்கமளித்துள்ளாா். ஒரு நெருக்கடி எழும்போது, நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்; இதில் அரசியல் கூடாது’ என்றாா்.

அதேநேரம், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் 30 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.