போரிலிருந்து மக்களைக் காக்க அரசு தவறி விட்டது: மார்க்சிய கம்யூனிஸ்ட்
மேற்கு ஆசியாவில் நிலவும் போரின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க அரசு தவறி விட்டதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் பேசியதாவது, "வணிக சிலிண்டர் விலை உயர்வு நாடு முழுவதும் உள்ள வீடுகளைப் பாதிக்கும். உலகெங்கிலும் மக்களைப் பாதிக்கும் போரின் தாக்கம் இதுதான்.
போரின் தாக்கத்தைத் திறம்பட கட்டுப்படுத்த இந்திய அரசு தவறியதற்கு, சிலிண்டர் விலை உயர்வு ஓர் எடுத்துக்காட்டு.
தொழிற்துறையில் ஏகாதிபத்தியத்துக்கு பயனளிக்கும் இந்த முடிவுகளுக்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
Advertisement
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலையும் ரூ. 261 உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு குறித்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியதாவது, இந்த சிலிண்டர் விலை உயர்வு, சாமானிய மக்களையும் உணவகங்களையும் பாதிக்கும். அவர்கள் (பாஜக) நாட்டின் வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர்.
தேர்தலுக்குப் பிறகு இவ்வாறு செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியும். இதைக் கண்டித்து, விலை உயர்வைத் திரும்பப் பெறுவதற்காக நாங்கள் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.