நாட்டின் பத்திரிகை சுதந்திரத்தில் கடும் சமரசம்! கார்கே விமர்சனம்
நாட்டின் பத்திரிகை சுதந்திரம் கடும் சமரசத்திற்குள்ளாப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது குறித்து...
நாட்டின் பத்திரிகை சுதந்திரம் கடும் சமரசத்திற்குள்ளாப்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிஜார்ஜுன கார்கே இன்று (மே 3) விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளதாவது:
''உலக பத்திரிகை சுதந்திர நாளான இன்று, மறுக்க முடியாத உண்மையை நாடு எதிர்கொள்ள வேண்டும். அதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா தொடர்ந்து சரிந்து வருகிறது. பாஜக ஆட்சியில் தொடர்ந்து சரிந்து 157வது இடத்தில் இந்தியா உள்ளது.
Advertisement
அரசாங்கத்தின் அச்சுறுத்தல், தலையீடு இல்லாமல் சுதந்திரமாக பத்திரிகை செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்ப வேண்டும். அதிகார வர்க்கத்திற்கும் மக்களுக்கும் இடையே ஜனநாயக சமநிலையை பத்திரிகைகள் கடைபிடிக்க வேண்டும்.
பொது உண்மைகளுக்கு பத்திரிகையாளர்களே பாதுகாவலர்கள். பத்திரிகை சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல, ஜனநாயக செயல்முறையின் அத்தியாவசியம் என ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகைகளை மெளனமாக்குவதற்காக சட்ட அமைப்புகளை ஆயுதங்களாக சங்பரிவார் பயன்படுத்துகிறது. அவதூறு சட்டங்கள், தேசிய பாதுகாப்பு விதிகள், விரிவான குற்றவியல் சட்டங்கள் போன்றவற்றை நீதிக்காக பயன்படுத்தாமல், அச்சுறுத்தலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
பத்திரிகையாளர்கள் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் கைது செய்யப்படுகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஜனநாயக நெறிமுறைகள் வீழ்த்தப்படுகின்றன'' என கார்கே பதிவிட்டுள்ளார்.