5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி
5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 4) தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துமுடிந்துள்ள 5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 4) தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளம், புதுவை, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி
Advertisement
'' ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளனர். இன்று, இந்தியாவின் ஜனநாயகம் மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பும் வெற்றி பெற்றுள்ளது.
இன்று, நமது அரசியலமைப்பு நிறுவனங்களும், நமது ஜனநாயகச் செயல்முறைகளும் வெற்றி கண்டுள்ளன. மேற்கு வங்கத்தில் பதிவான ஏறக்குறைய 93 சதவீத வாக்குப் பதிவு, தனக்கே உரித்தான வகையில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.
தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவுச் செயல்பாட்டில் ஈடுபட்ட அனைத்துச் சகோதர சகோதரிகள் மற்றும் குறிப்பாகப் பாதுகாப்புப் படைகள் ஆகியோரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்திய ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பதில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பை வரலாறு என்றென்றும் நினைவுகூரும்.
இந்திய அரசியலில் மற்றொரு பெரும் மாற்றத்தை இன்று நாம் காண்கிறோம். நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் ஒன்றில்கூட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இல்லை.
இது அரசியலில் ஏற்பட்ட ஒரு மாற்றம் மட்டுமல்ல; இது மனநிலையில் ஏற்பட்ட ஒரு மாற்றமாகும். வளர்ந்து வரும் இந்தியா எந்த திசையில் பயணிக்க விரும்புகிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
இன்றைய இந்தியா, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அரசியலையே விரும்புகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய காங்கிரஸ் கட்சி அதற்கு முற்றிலும் எதிரான திசையில் பயணித்து வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.