ஒடிஸாவில் கணவன் வீட்டின் முன் கர்ப்பிணி தர்னா: வெட்டிப் படுகொலை செய்த கணவன் குடும்பம்! - பட்நாயக் இரங்கல்
கணவரால் கைவிடப்பட்ட கர்ப்பிணியை வெட்டிப் படுகொலை செய்த கணவன் குடும்பம் : ஒடிஸா முதல்வருக்கு பட்நாயக் வலியுறுத்தல்...
புவனேசுவரம் : ஒடிஸாவில் கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் தமது கணவன் குடும்பத்தினரால் கோடரியால் வெட்டிப் படுகொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
ஒடிஸாவைச் சேர்ந்த பூஜா(21) அங்கு கூலி வேலை செய்யும் சிண்டூ என்பவருடன் சமூக வலைதளம் மூலம் பழகி அதன்பின், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், இந்தக் காதல் திருமணத்துக்கு சிண்டூவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பூஜா மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து, சிண்டூவின் குடும்பத்தாரைச் சந்திக்க இந்தத் தம்பதி தமது மகளுடன் கடந்த ஏப். 17-இல் ரயிலில் புறப்பட்டது. அவர்கள் அனைவரும் பேராம்பூர் ரயில் நிலையத்தை அடைந்த நிலையில், மகளையும் கர்ப்பிணி மனைவியையும் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு திடீரென சிண்டூ மாயமானார்.
Advertisement
இதையடுத்து, இது குறித்து பூஜா தன்னையும் தனது மகளையும் தமது கணவன் கைவிட்டு தப்பி விட்டதாக ஹிஞ்சிலி காவல் நிலையத்தில் கடந்த ஏப். 19-இல் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர் தமது கணவன் குடும்பத்திடம் நீதி கேட்டு கடந்த திங்கள்கிழமை மகளுடன் தர்னாவில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை(மே 5) அவர் மீது அவரது கணவரின் குடும்பத்தார் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பூஜாவின் சகோதரர்கள் கோடரியால் அவரை சாகும்வரை வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதில் பூஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பூஜாவின் 3 வயது மகள் தமது தாயின் சடலத்தின் அருகில் கண்ணீர்விட்டுக் கதறியழுத காட்சி இணையத்தில் விடியோவாக வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்குப்பதிந்துள்ள ஒடிஸா காவல் துறை, பூஜாவைக் கொன்ற வழக்கில் சிண்டூவின் 17 மற்றும் 16 வயதேயான இரு சகோதரர்களையும் கைது செய்து விசாரணையை முடுக்கி உள்ளது.
இது குறித்து ஒடிஸா முன்னாள் முதல்வரும் அம்மாநில பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மஜ்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மேற்குறிப்பிட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இவ்விவகாரத்தில் முதல்வர் தலையிடவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஒடிஸாவில் உள்துறை அமைச்சகத்தையும் முதல்வரே நிர்வகிப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்து உரிய விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட அவர் முதல்வரை வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் குழந்தைக்கு உரிய நிவாரணமும் மறுவாழ்வும் அரசு அளித்திடவும் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த பூஜாவின் குழந்தை குழந்தைகள் நல கமிட்டியின் அறிவுறுத்தலின்பேரில், காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.