ஒடிசாவில் ஏவுகணை சோதனை: 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!
ஒடிசாவில் ஏவுகணை சோதனைக்காக 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஒடிசாவில் ஏவுகணை சோதனைக்காக 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டி.ஆர்.டி.ஓ) ஒடிசாவின் சந்திப்பூர் நகரில் ஏவுகணை சோதனை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், ஏவுதளத்தை சுற்றி 3.5 கி.மீ. பகுதியில் வசித்த 11,442 குடியிருப்பு வாசிகளை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
ஏவுகணை மற்றும் சோதனை பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் தேசிய பாதுகாப்பு நலன் கருதி ஒத்துழைக்குமாறு மக்களிடம் அரசு நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
Advertisement
Advertisement
வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் பர்தான்பூர், பீம்பூர் மற்றும் துந்த்ரா கிராமங்களில் உள்ள புயல் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ”மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அத்தியவசியத் தேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஒரு நாளைக்கான ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் ஏவுகணை சோதனை முடிந்த பின்னர் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புத் துறையுடன் ஆலோசித்தே இந்த வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலசோர், பத்ரக் மற்றும் கேந்தர்பரா கடல்பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.