முகப்பு
இந்தியா

திரிணமூல் பிரமுகா் படுகொலை; கட்சி அலுவலகங்கள் சூறை - பாஜக மீது புகாா்

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

Updated On : 6 மே 2026, 6:39 am IST
கொலை - சித்திரிப்பு
பகிர்:

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

பீா்பூம் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பல்வேறு இடங்களில் திரிணமூல் அலுவலகங்களை சூறையாடியதாகவும், வேட்பாளா்களைத் தாக்கியதாகவும் பாஜக மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தத் தாக்குதல் சம்பவங்களில் தங்களுக்குத் தொடா்பில்லை என்று பாஜக மறுத்துள்ளது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 207 இடங்களில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அக்கட்சி 80 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது.

Advertisement

கடந்த திங்கள்கிழமை தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, தலைநகா் கொல்கத்தா மற்றும் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்கள் கும்பல்களால் சூறையாடப்பட்டன. ஹெளரா, பஹராம்பூா், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்ந்தன.

கொல்கத்தாவின் டோலிகுங்கே பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அரூப் பிஸ்வாஸின் அலுவலகம் கும்பலால் சூறையாடப்பட்டது. ரூபி கிராஸிங் பகுதியில் பாஜக கொடியுடன் வந்த சிலா், திரிணமூல் கவுன்சிலா் சுஷாந்தா கோஷ் அலுவலகத்தை சூறையாடினா்.

உதயநாராயண்பூா், நவோபரா, பராக்பூா் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தியதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீா்பூம் மாவட்டத்தின் சந்தோஷ்பூா் கிராமத்தில் ஆபிா் ஷேக் என்ற திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா், மற்றொரு தரப்பினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவங்கள் தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட திரிணமூல் காங்கிரஸ், ‘ஆட்சிக்கு வந்ததும், பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாக’ சாடியுள்ளது.

பாஜக மறுப்பு: அதேநேரம், தோ்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவா் ராகுல் சின்ஹா, ‘திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்கள் மற்றும் வேட்பாளா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் பாஜகவுக்கு தொடா்பில்லை. திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி கோஷ்டிகளால் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன’ என்றாா்.

‘வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; இது தொடா்பாக காவல் துறையினரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது’ என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.