நாட்டில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின் வசதி, கழிப்பறைகள் இல்லை! நீதி ஆயோக்
நாட்டின் பள்ளி, கல்வித் தரம் குறித்து நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை...
நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் பள்ளிகளில் மின்சார வசதியும், மாணவிகளுக்கான தனிக் கழிப்பறைகளும் இல்லை என்று நீதி ஆயோக்கின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாட்டின் பள்ளிக் கல்வி முறை” என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வியாழக்கிழமை நீதி ஆயோக் வெளியிட்டுள்ளது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை மற்றும் கற்றல் குறியீடுகள் தொடர்பான தேசிய மற்றும் மாநில அளவிலான தரவுகளைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், நாட்டிலுள்ள 98,592 பள்ளிகளில் மாணவிகளுக்கான பிரத்யேக கழிப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை என்றும், 61,540 பள்ளிகளில் பயன்படுத்தக்கூடிய நிலையில் எந்தவொரு கழிப்பறையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளுக்கான மின்சார வசதி 55 சதவிகிததில் இருந்து 91.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 1.19 லட்சம் பள்ளிகளில் மின்சார வசதி பயன்படுத்தும் நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 14,505 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை, 59,829 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லை. 51.7 சதவிகிதம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன.
பிகாரில் அதிகபட்சமாக 2 லட்சம் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள 7,993 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர்கூட பயிலவில்லை.
மேலும், இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 4.6 சதவிகிதத்தை மட்டுமே கல்விக்காகச் செலவிடுகிறது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா 5.9%, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் 5.4% செலவிடுகின்றன.