பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம்! முதல்வர் விஜய் பங்கேற்பு!
பிரதமர் மோடி தலைமையிலான நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றதைப் பற்றி...
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்றார்.
தில்லியில் இன்று (ஜூன் 11) காலை பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாசார மையத்தில் நீதி ஆயோக்கின் 11-வது கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா, நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌஹான், தமிழக முதல்வர் விஜய், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தில்லி முதல்வர் ரேகா குப்தா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
மாநில முதல்வர்களைத் தவிர்த்து யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் மற்றும் நீதி ஆயோக்கின் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டமான நீதி ஆயோக் கூட்டத்தில் மாநிலங்களின் நிதித் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் சேர்ந்து குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்தக் கூட்டம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் வழிகாட்டுதலுடன், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.
'வளர்ந்த இந்தியா - விக்ஷித் பாரத்' என்ற பொதுவான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைத் தவிர்த்து மற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர். புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, இன்றிரவு 7 மணியளவில் பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை பகலில் தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் பெங்களூரு வழியாக சென்னை திரும்புவார் என்று தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்பாக தமிழக முதல்வராக இருந்தவர்கள் தில்லி வரும்போது அவர்களுடைய கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், மாநிலத்தின் சில அமைச்சர்களையும் உடன் அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரதிகாரிகளுடன் மட்டும் தில்லி வந்துள்ளார். அவருக்கு நெருக்கமான சிலர் நீங்கலாக வேறு அமைச்சர்கள் எவரும் முதல்வரின் தில்லி பயணத்தில் இடம்பெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.