7 நாள்களுக்குள் எல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?
7 நாள்களுக்குள் எல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் என்று வரும் குறுந்தகவல் பற்றி..
நாடு முழுவதும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானியம் என்பது, அனைவருக்கும் வழங்கப்பட்டுவந்த நிலையில், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு மானியம் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுவரை வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து ஏராளமான குறுந்தகவல்கள் வரலாம். விலை உயர்வு, முன்பதிவு தொடர்பானவையாக இதுவரை இருந்திருக்கலாம்.
ஆனால், தற்போது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவருகிறது. அதற்கு பதிலளிக்காவிட்டால் 7 நாள்களுக்குள் எல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Advertisement
எல்பிஜி சிலிண்டர் மானியம் - எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மாற்றி, மத்திய அரசு சிலிண்டர் வாங்கும்போது உரிய தொகையைக் கொடுத்து வாங்கி விட்டு, பிறகு அந்த மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. தொடக்கத்தில் இந்த தொகை சில நூறுகளில் இருந்து பிறகு, அது படிப்படியாகக் குறைந்து ரூ.24.50க்கு வந்திருக்கிறது.
இதன்பிறகு, எரிவாயு சிலிண்டர் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தது.
இந்த நிலையில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரங்களை ஆராயத் தொடங்கியிருக்கின்றன. அதன்படி, சிலிண்டர் மானியம் பெறும் குடும்பத்தில் ஒட்டுமொத்த வருவாய் ரூ.10 லட்சத்துக்கும்மேல் இருந்தால், அவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஒரு குறுந்தகவல் வருகிறதாம். அதில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரங்களின்படி, உங்கள் குடும்பத்தில் மானியம் பெற நிர்ணயிக்கப்பட்ட வருமானமான ரூ.10 லட்சத்தை விட அதிக வருவாய் ஈட்டுவது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து உங்கள் விளக்கத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று தொலைபேசி எண் வழங்கப்படுகிறது. அதில் தொடர்புகொண்டு வாடிக்கையாளர்கள் விளக்கம் கொடுக்கலாம். அல்லது மானியத்தை விட்டுக்கொடுப்பதாக ஒப்புதல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் கொடுத்த காலக்கெடுவுக்குள் வாடிக்கையாளர்கள் திரும்ப அழைக்காவிட்டால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மானியம் தன்னிச்சையாகவே நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிலிண்டர் மானியம் வழங்குவதற்கு அடிப்படை தகுதியாக ரூ.10 லட்சத்துக்குள் ஆண்டு வருவாய் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
அதன்படி, படிப்படியாக ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் உயரும் குடும்பத்துக்கு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது இந்த குறுந்தகவல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.