நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...
நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி தினேஷ் பின்வால் மற்றும் அவரின் சகோதரர் மங்கிலால் ஆகியோர் கடந்த ஏப். 26 அன்று நீட் தேர்வுக்கான வினாத்தாளை ரூ. 30 லட்சம் கொடுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த வினாத்தாளை கடந்த ஏப். 29 அன்று நீட் தேர்வுக்காக சிகார் மாவட்டத்தில் பயிற்சி பெற்று வரும் தினேஷின் மகன் உள்ளிட்ட மாணவர்களுக்கு அவர்கள் வழங்கியதும், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தினேஷின் குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றதும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Advertisement
இத்துடன், சிகாரில் பயிற்சி மையம் நடத்தி வரும் ரகேஷ் மண்டார்வியா என்பவரும் இணைந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகள் அனைவரும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஆலோசனை மையங்களுக்கும் வினாத்தாளை விற்பனை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராகேஷ் மண்டார்வியா மற்றும் அவரின் கூட்டாளிகள் உள்ளிட்ட 15 பேரை கடந்த செவ்வாய்க்கிழமை (மே 12) இரவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் முக்கிய குற்றவாளியான தினேஷ் பின்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், பாஜக நிர்வாகி முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பாஜக தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரைத் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், குற்றவாளி பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தை அரசு மூடி மறைக்க முயற்சி செய்கிறதா என்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெஹ்லோட் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.