பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
சில்லறை எரிபொருள் விலை மாற்றத்தைத் தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு
சில்லறை எரிபொருள் விலை மாற்றத்தைத் தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடத்திய மாநாட்டில் பங்கேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா பேசியதாவது, "மேற்கு ஆசியாவில் நெருக்கடி நீடித்தால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி, பொருளாதாரம் மீது அழுத்தம் ஏற்படுகிறது.
Advertisement
எரிசக்தி நெருக்கடி தொடர்ந்து நீடித்தாலோ மோசமடைந்தாலோ சில்லறை எரிபொருள் விலையை காலவரையின்றி மாற்றாமலிருப்பதைத் தவிர்க்க முடியாது.
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலால், கலால் வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்,
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 70 டாலரிலிருந்து 120 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் ஒவ்வொரு நாளும் ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கலால் வரிகளைக் குறைப்பாலும், அரசுக்கு ரூ. 1,70,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்பட்டு, நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது நடப்பதாய் தெரியவில்லை.
இதனிடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில், நாட்டில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.