தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்
தில்லியில் அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி, அந்த மாநில முதல்வர் உத்தரவிட்டது குறித்து...
தில்லியில் அரசு ஊழியர்களை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு மட்டும் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி, அந்த மாநில முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
தனியார் நிறுவனங்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலிலிருந்து விடுபடுதல் போன்ற திட்டங்களை நோக்கி நாம் நகரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ள, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறும் முடிந்தவரை, ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, தில்லி முதல்வர் ரேகா குப்தா அறிமுகப்படுத்தியுள்ள முக்கியத் திட்டங்கள்:
அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்.
அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசலுக்கான செலவு 20 சதவிகிதம் குறைக்கப்படும்.
அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மெட்ரோ ரயிலை பயன்படுத்த வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் வாகனமில்லா தினத்தை கடைப்பிடிக்க வேண்டுகோள்.
அரசுக்குப் பயன்படும் வாகனங்களைப் புதிதாக வாங்குவது ஆறுமாத காலம் நிறுத்தப்படுகிறது.
முடிந்தவரை, அரசு அதிகாரிகள் உள்பட அனைவரும் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
வழக்கமான அலுவலகங்களுக்கு இடையேயான பயணத்தைக் குறைப்பதற்காக, 50 சதவிகித அலுவல் கூட்டங்களை இணையவழியில் நடத்த திட்டமிட வேண்டும்.