நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசு
நீட் மறுதேர்வு கூடுதலாக நேரம் வழங்கப்படுவது பற்றி...
நீட் மறுதேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு காரணமாக மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் மறுதேர்வு நடைபெறும் என்று இன்று காலை தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
“வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாளே, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மறுதேர்வுக்கும் கட்டணம் வாங்கப்படாது.
மாணவர்கள் அவர்கள் தேர்வெழுத விரும்பும் நகரத்தை மீண்டும் தேர்ந்தெடுக்க ஒருவார காலம் அவகாசம் அளிக்க என்டிஏ முடிவு செய்துள்ளது. மாணவர்களின் வசதிக்காகவும், அவர்களின் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு தேர்வு நேரத்தை 15 நிமிடங்கள் நீடிக்க என்டிஏ முடிவு செய்துள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்த முறை தேர்வெழுதும் மாணவர்களின் போக்குவரத்து சிரமத்தை குறைக்க நானும் அனைத்து மாநில முதல்வர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
ஜூன் 21 ஆம் தேதி வானிலை மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் என்டிஏ பரிசீலித்து வருகிறது” என்றார்.
NEET Re-exam! 15 Additional Minutes to be Provided! — Central Government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.