உன்னாவ் வழக்கு! குல்தீப் செங்காரின் ஆயுள் தண்டனையை நீக்கிய உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம்
உன்னாவ் பாலியல் வழக்கில், குல்தீப் செங்காரின் ஆயுள் தண்டனையை நீக்கிய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
புது தில்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்கவும் தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கார் விடுதலையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, குல்தீப் செங்கார் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அடுத்து 2 மாதங்களுக்குள் விசாரித்து உத்தரவிட முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
Advertisement
சந்தேகத்துக்கு இடமின்றி முடிவெடுக்க உயர் நீதிமன்றத்தால் முடியாவிட்டால், கோடைக்கால விடுமுறை அமர்வு தொடங்குவதற்கு முன்பே, செங்கார் மனுவை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மனு மீது எந்தவிதமான கருத்தையும் உச்ச நீதிமன்றம் முன்வைக்க விரும்பவில்லை என்றும், இந்த வழக்கை மீண்டும் புதிதாக எந்த கட்டுப்பாடுமின்றி விசாரிக்க மட்டுமே அறிவுறுத்துவதாகவும் கூறியிருக்கிறது.
செங்காரின் தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்யவும் தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து, அவர் விடுவிக்கப்படவும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது) முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கா் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இந்த வழக்கை உத்தர பிரதேசத்தில் இருந்து தில்லிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக போக்ஸோ சட்டத்தின் கீழ், செங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் செங்கா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், செங்காரை விடுதலை செய்து உத்தரவிட்டது.