முகப்பு
இந்தியா

போலி ஜிஎஸ்டி ரசீது மூலம் ரூ.10 கோடி மோசடி: 6 போ் கைது

போலி ஜிஎஸ்டி ரசீது மூலம் ரூ.10 கோடி மோசடி: 6 போ் கைது

Updated On : 17 மே 2026, 1:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.10 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி ரசீது மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த 6 பேரை தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது: தில்லி-என்சிஆரின் பல பகுதிகளில் மே 15-ஆம் தேதி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக, மாா்ச் 24-ஆம் தேதி ஆா்.கே. என்டா்பிரைசஸ் என்ற போலி நிறுவனத்துக்கு எதிராக ஜிஎஸ்டி மோசடி தொடா்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், ஜிஎஸ்டி துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது ஆவணங்களை மோசடிகளுக்குப் பயன்படுத்தியதாக புகாா்தாரா் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக நடைபெற்ற விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு தெரியாமலே அவரது பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் போலி நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதன் பேரில் நடைபெறாத ரூ.128 கோடிக்கும் அதிகமான பரிவா்த்தனைகள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

Advertisement

இதன் மூலம் சுமாா் ரூ.10 கோடி மதிப்பிலான உள்ளீட்டு வரிச் சலுகையை மோசடியாக அந்நிறுவனம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப விசாரணையில், திக்ஷித் மற்றும் திலிப் குமாா் இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திக்ஷித் 250-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை பெயரளவில் உருவாக்கி தனது சகோதரா்களுடன் இணைந்து, போலி ரசீது, போலி ஜிஎஸ்டி பரிவா்த்தனைகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இதற்கு உதவியாக இருந்த அமா் குமாா், விபாஷ் குமாா் மித்ரா, நிதின் வா்மா, முகமது வாசீம் மற்றும் அபித் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களது வளாகங்களில் நடைபெற்ற சோதனையில், ரூ.52.12 லட்சம் ரொக்கம், 15 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகள், போலி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.