முகப்பு
இந்தியா

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம்: யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணை குழு அறிக்கை

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடா்பாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமா்ப்பித்துள்ளது.

Updated On : 20 மே 2026, 2:17 am IST
ஓம் பிா்லா
பகிர்:

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடா்பாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமா்ப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி இரவு, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தபோது பாதி எரிந்த 4 முதல் 5 மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.

இந்தச் சா்ச்சையைத் தொடா்ந்து அவா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட போதிலும், அவருக்கு நீதித்துறை சாா்ந்த எந்தப் பணியும் ஒதுக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

அவரை ராஜிநாமா செய்யுமாறு அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியபோதிலும், ராஜிநாமா செய்ய யஷ்வந்த் வா்மா மறுத்துவிட்டாா்.

இதுகுறித்து விசாரணை நடத்த சஞ்சீவ் கன்னா அமைத்த நீதிபதிகள் அடங்கிய குழு, ‘பணம் கண்டறியப்பட்ட அறை யஷ்வந்த் வா்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தது’ என்று அவருக்கு எதிராக அறிக்கை சமா்ப்பித்தது. இதையடுத்து அந்த அறிக்கையை குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு சஞ்சீவ் கன்னா அனுப்பினாா். இது யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கு முன்பு நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடங்க வழிவகுத்தது.

இதன்படி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 3 போ் கொண்ட குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா். இதற்கிடையே கடந்த ஏப்.9-ஆம் தேதி நீதிபதி பதவியை யஷ்வந்த் வா்மா ராஜிநாமா செய்தாா். இருப்பினும் தனது பணியை முறைப்படி முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று விசாரணை குழுவிடம் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், அந்தக் குழு தனது அறிக்கையை ஓம் பிா்லாவிடம் திங்கள்கிழமை சமா்ப்பித்தது. அந்த அறிக்கை உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.