தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி!
தெருநாய்கள் விவகாரத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...
தெருநாய்கள் விவகாரத்தில் கடந்தாண்டு அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
தெருநாய்களை அகற்றக் கோரிய வழக்கில் கடந்தாண்டு நவம்பர் 7 அன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், பள்ளிகள், மருத்துவமனைகள், கல்வி வளாகங்கள், விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்க்களை அகற்ற அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பிடிக்கப்பட்ட தெருநாய்களுக்குத் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு, மீண்டும் அதே பகுதிகளிலேயே அவற்றை விடுவிக்கக் கூடாது என்றும் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தெருநாய்களுக்கு கருத்தடை செய்தபின், மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது என்ற உத்தரவில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பொது இடங்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்தபிறகு, பராமரிப்பு நிலையங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் மீண்டும் வலுயுறுத்தியது.
இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், சமூகத்தின் நலிந்த பிரிவினர் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘தகுதியுள்ளவையே பிழைத்திருக்கும்’ (survival of the fittest) எனும் டார்வின் கோட்பாடு நடைமுறையில் இருப்பதாகவே தோன்றுகிறது.
இத்தகைய அச்சுறுத்தல்களைக் குழந்தைகள் மற்றும் முதியவர்களால் தனியாக எதிர்கொள்ள முடியாது. மக்களின் உயிருக்கும் பொதுப் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பது அரசுகளின் கடமை.
இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் 'வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை' என்பது, ஒவ்வொரு குடிமகனும் எந்த நேரத்திலும் உடல்ரீதியான தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோமோ அல்லது பொது இடங்களில் நாய்க்கடி போன்ற உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளைச் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்கும் பொது இடங்களை அணுகுவதற்கும் உள்ள உரிமையையும் உள்ளடக்கியது.
மனித உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆபத்துகளைத் தடுப்பதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சட்டரீதியான வழிமுறைகள் நடைமுறையில் இருந்தும், தடுக்கக்கூடிய அத்தகைய ஆபத்துகள் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும்போது, அரசு ஒரு செயலற்ற பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது” எனக் குறிப்பிட்டனர்.