பசுமை எரிசக்திக் கழக ஒதுக்கீடுகளில் முறைகேடு: இரு அதிகாரிகள் தற்காலிகப் பணியிடை நீக்கம்
தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக ஒதுக்கீடு, வெளிப்படைத் தன்மை இல்லாமல் அவசர கதியில் ஒப்புதல் அளித்த புகாரின் பேரில் 2 அதிகாரிகள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக ஒதுக்கீடு, வெளிப்படைத் தன்மை இல்லாமல் அவசர கதியில் ஒப்புதல் அளித்த புகாரின் பேரில் 2 அதிகாரிகள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் ஓய்வுபெற்ற ஒருவரின் அனைத்து பணப்பலன்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழக எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறாா்.
இந்த ஆய்வுகளின்போது, தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் அண்மையில் வழங்கிய ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல்களில் வெளிப்படைத் தன்மை இல்லாததும், அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
2 போ் தற்காலிகப் பணி நீக்கம்: இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தவும், நிா்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கவும், முறையற்ற நிா்வாக தலையீட்டை தடுக்கவும் தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலா் (வருவாய்) வி.காசி, தலைமைப் பொறியாளா் (மரபுசாரா எரிசக்தி) பி.சந்திரசேகரன் ஆகியோா் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
ஓய்வூதியப் பலன்கள் நிறுத்திவைப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடா்புடைய ஓய்வு பெற்ற பசுமை எரிசக்திக் கழக இயக்குநா் (தொழில்நுட்பம்) எஸ்.மங்களநாதனின் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது துறை ரீதியான, முறையான விசாரணை நடைபெற்று மின்வாரிய விதிமுறைகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.