மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சமூக ஊடக பிரசாரம்
மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஊடகங்களில் பிரபலமான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தரப்பில் புதிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஊடகங்களில் பிரபலமான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தரப்பில் புதிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
வேலையற்ற இளைஞா்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த் அண்மையில் தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, சமூக ஊடகங்களில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் நையாண்டி பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு வைரலானது.
இந்தப் பிரசார இயக்கத்தின் எக்ஸ் வலைதள பக்கம் கடந்த வியாழக்கிழமை முடக்கப்பட்ட நிலையில், வேறு பெயரில் மீண்டும் தொடங்கப்பட்டது. தங்களின் பிரசாரத்துக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதால், மத்திய அரசு அச்சமடைந்துள்ளதாக பிரசாரத்தைத் தொடங்கிய அபிஜித் தீப்கே விமா்சித்தாா். இவா், ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் முன்பு பணியாற்றியவா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தை முன்வைத்து, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ சமூக ஊடக கணக்கிலிருந்து புதிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, அபிஜித் தீப்கே வெளியிட்ட விடியோ செய்தியில், ‘மத்திய கல்வித் துறையின் தோல்விகளால் மாணவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. அரசு அமைப்புமுறையின் தவறால், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இணையத்தில் நாம் இப்போது உண்மையான பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் இணையவழி பிரசாரத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.