திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருப்பு: சமிக் பட்டாச்சார்யா
திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருக்கின்றனர் என்று சமிக் பட்டாச்சார்யா தெரிவித்தது குறித்து...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருக்கின்றனர் என்று பாஜகவின் மாநிலத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சமிக் பட்டாச்சார்யா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வென்று, மமதா பானர்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக ஆட்சியை அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மே 21) ஃபால்டா தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான், வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தான் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
Advertisement
Advertisement
இதற்குக் காரணமாக, முதல்வர் சுவேந்து அதிகாரி ஃபால்டா தொகுதிக்கு சில முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகவும் அதற்கு தான் முழுஆதரவு தெரிவித்து போட்டியிலிருந்து விலகுவதாகவும் ஜஹாங்கீர் கான் கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய சமிக் பட்டாச்சார்யா, ” திரிணமூல் காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியே அல்ல. அக்கட்சியில் இருந்தவர்கள் அரசியல் அதிகாரத்துக்காகவே அங்கு இருந்தனர். தற்போது பாஜக அதிகாரத்தில் உள்ளது. ஆகவே, மேற்கு வங்க மக்கள் நமக்கு அளித்த ஆதரவை நிலைநிறுத்துவது நம்முடைய கடமை ஆகும்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள் என்று நான் கூறவில்லை. அதிலும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பாஜகவில் சேர விரும்புகின்றனர். அவர்கள் குறித்து கட்சிதான் முடிவுசெய்ய வேண்டும். மேலும் அவர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.