மானாமதுரை அருகே கோஷ்டி மோதல்: பெண்கள் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை, நவ7: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திங்கள்கிழமை இரு தரப்புக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு பெண்கள் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மானாமதுரை அருகே சங்கமங்கலம் கிராமத்தைச்
மானாமதுரை, நவ7: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திங்கள்கிழமை இரு தரப்புக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு பெண்கள் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மானாமதுரை அருகே சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி சண்முகவள்ளி. இவர் வயலுக்கு விதை நெல் கொண்டு சென்றுள்ளார். அப்போது இதே கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் வயல் வரப்பில் படுத்திருந்தாராம். தனக்கு பாதை விடுமாறு சண்முகவள்ளி கூறியபோது, இருவருக்கும் இடையில் வாய்த் தகறாறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்குத் திரும்பிய இவர், நடந்த சம்பவத்தை கணவர் பாலசுப்ரமணியத்திடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சங்கமங்கலம் கிராமத்தில் பாலசுப்ரமணியம் தரப்பினரும் அர்ச்சுனன் தரப்பினரும் மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் அரிவாள், வேல்கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களால் ஒருவரையொருவர் வெட்டினர். இச் சம்பவத்தில் பாலசுப்ரமணியம், இவரது மனைவி சண்முகவள்ளி, தந்தை அரிதாஸ், தம்பி பிரகாஷ், ஆகியோருக்கும், எதிர்த்தரப்பில் அர்ச்சுனன், தம்பி முத்துராமலிங்கம், இவரது மனைவி தனலெட்சுமி ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
மோதலில் காயமடைந்தவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயமடைந்த அரிதாஸ், அர்ச்சுனன் ஆகிய இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.