சென்னை, ஏப். 16: வால்பாறையில் உள்ள என்.இ.பி.சி., ஹைபாரஸ்ட், வேவர்லி ஆகிய தேயிலைத் தோட்டங்களை அரசு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்றும் நடத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என மாநில வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எம். ஆறுமுகம் (இந்திய கம்யூ-வால்பாறை) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வால்பாறையில் உள்ள என்.இ.பி.சி., ஹைபாரஸ்ட், வேவர்லி ஆகிய நலிவடைந்த தேயிலைத் தோட்டங்களை தமிழக அரசின் தேயிலைத் தோட்டக் கழகமே ஏற்று நடத்த அரசு ஆவன செய்யுமா? என்று கேட்டார் எம்.ஆறுமுகம்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், வால்பாறையில் உள்ள என்.இ.பி.சி., ஹைபாரஸ்ட், வேவர்லி ஆகிய நலிவடைந்த தேயிலைத் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகள் மிகவும் வயதானதாகவும், நலிவடைந்ததாகவும் உள்ளன. ஆதலால், தேயிலை மகசூலும், தரமும் குறைவாக இருக்கும். மேலும், தொழிலாளர்களின் பற்றாக்குறையால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் அவ்வப்போது லாபம் மற்றும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் இந்த தனியார் தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்று நடத்தும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.
இருப்பினும் உறுப்பினர் ஆறுமுகம் மேலும் தொடர்ந்து, "அந்த தேயிலைத் தோட்டங்களில் தேயிலை செடிகள் மாற்றி நடப்பட்டு இப்போது நல்ல தரமான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு லாபம் ஈட்டப்பட்டு வருகிறது. எனவே, அதை அரசே ஏற்று நடத்த பரிசீலிக்க வேண்டும்" என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.