பண்ருட்டி அருகே சிறுவன் மர்ம சாவு: சுடப்பட்டதாக புகார்
பண்ருட்டி, ஆக. 19: பண்ருட்டி பகுதி தேமுதிக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் அனந்தராமன், இவருடைய மூத்த சகோதரர் கதிர்காமன். கதிர்காமனின் பெண் செந்தமிழ்ச் செல்வி என்பவருக்கு நாளை திருமணம் என்பதால், திருமணத்த
பண்ருட்டி, ஆக. 19: பண்ருட்டி பகுதி தேமுதிக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் அனந்தராமன், இவருடைய மூத்த சகோதரர் கதிர்காமன். கதிர்காமனின் பெண் செந்தமிழ்ச் செல்வி என்பவருக்கு நாளை திருமணம் என்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் கதிர்காமனின் மகன் கமலபாலன் (15) திருமண வீட்டில் குழாய் ஸ்பீக்கர் கட்டுவதற்காக, தங்களுக்குச் சொந்தமான கோயிலின் கோபுரத்தில் ஏறி, அதில் கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கரை கழற்ற முற்பட்டிருக்கிறார். அப்போது பிடி தவறி கீழே விழுந்து இறந்துவிட்டாராம்.
இதை அடுத்து நாளை திருமணம் நடக்கவுள்ளதால், உடனடியாக அவருடைய சடலத்தை குடும்பத்தார் எரித்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டில் வெடிச் சத்தம் கேட்டதாகவும், வீட்டில் கள்ளத்துப்பாக்கி வெடித்து இருக்கலாம் என்றும் அக்கம்பக்கத்தினர் புகார் கூறினர்.
இது குறித்து பண்ருட்டி டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய போலீஸார், சிறுவன் இறந்துவிட்ட நிலையில் உடனடியாக சடலத்தை எரித்தது குறித்து விசாரணை நடத்தினோம். மற்றபடி, கள்ளத் துப்பாக்கி இருப்பதாக சொல்வதெல்லாம் வெறும் யூகம்தான். அதுபற்றி எந்த தடயமும் இல்லை என்றனர். இருந்தபோதும், இவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிர் இழந்திருக்கலாம் என்றே அக்கம்பக்கத்தினர் உறுதியாகக் கூறுகிறார்கள்.
இந்த விவகாரம் பண்ருட்டி பகுதியில் சோகத்தையும் அதே நேரம் ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தியது.