திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நிர்வாக மேம்பாட்டிற்காக திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் என பிரிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், திருவெறும்பூர், மணப்பாறை பகுதி அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 3,86,097 இரு சக்கர வாகனங்களும், 20,500 கார்களும், லாரி, சுற்றுலா வாகனங்கள்,வேன் என இதர நான்கு சக்கர வாகனங்கள் 17,000 பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் மக்கள் தொகை பெருக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, நிர்வாக மேம்பாடு மற்றும் பொதுமக்கள் வசதிக்காக திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை இரண்டாகப் பிரிக்க கருத்துரு கடந்த மே மாதத்தில் அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில், தற்போது இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இனி திருச்சி மேற்கு என்றும், புதிதாக திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உருவாக்க நவம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகள் எங்கு : திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உறையூர், பொன்மலை, விமானநிலையம், தென்னூர், தில்லைநகர், ஜமால் முகமது கல்லூரி, கே.கே.நகர், காஜாநகர் பகுதிகளும், மணப்பாறை பகுதி அலுவலகமும் இருக்கும்.
திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாலக்கரை, தெப்பக்குளம், மலைக்கோட்டை, அரியமங்கலம், மேலகல்கண்டார்கோட்டை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதிகளும் திருவெறும்பூர் பகுதி அலுவலகமும் இருக்கும்.
எத்தனை பணியிடங்கள் : புதிதாக உருவாக்கப்படும் திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர், நேர்முக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் கண்காணிப்பாளர்,கணக்கர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து மோட்டார் வாகனஆய்வாளர் நிலை 1-ல் இரண்டு பணியிடங்கள், இளநிலை உதவியாளர்,உதவியாளர் பணியிடங்கள் தலா 3, தட்டச்சர், பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்கள் மறுபணியமர்த்தல் மூலம் நிரப்பப்பட உள்ளன.
திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்காக தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக ரூ. 34.02 லட்சம் நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இடம் தேர்வு மும்முரம்: "புதிதாக உருவாக்கப்படும் திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதால், நீண்ட தொலைவில் இருந்து வருபவர்களுக்கு இனி அலைச்சல் இருக்காது. புதிய அலுவலகத்தில் அனைத்துவித பணிகளையும் மேற்கொள்ளலாம்' என்றார் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். பாலசுப்பிரமணியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.