நிவாரணத் தொகையில் 'கட்டிங்’: கிராம நிர்வாக அலுவர் முற்றுகை
சிதம்பரம், ஜன. 20: சிதம்பரம் அருகே, அரசு அறிவித்த புயல் நிவாரணத் தொகையில் ரூ.500-ஐ பிடித்துக் கொண்டு, குறைவாக வழங்கப்பட்டதால், கிராம நிர்வாக அலுவலரை, மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம், ஜன. 20: சிதம்பரம் அருகே, அரசு அறிவித்த புயல் நிவாரணத் தொகையில் ரூ.500-ஐ பிடித்துக் கொண்டு, குறைவாக வழங்கப்பட்டதால், கிராம நிர்வாக அலுவலரை, மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சிதம்பரம் அருகே உள்ள பரமேஸ்வரநல்லூர் பகுதி மக்களுக்கு சிவகாமி நகரில் உள்ள கோயிலில் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மூலம் புயல் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
அப்போது நிவாரணத் தொகை ரூ.2500-க்கு பதிலாக ரூ.2ஆயிரம்தான் வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் முன்னிலையில், கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதி, சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்து பணத்தை எடுத்து காண்பித்தனர்.
குறைவாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டது குறித்து மக்கள், கோட்டாட்சியரிடம் புகார் மனுக்களையும் அளித்தனர். பின்னர் கோட்டாட்சியர், குறைவாக கொடுக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதனால் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.