திருக்கோவிலூர் அருகே காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்: போக்குவரத்து பாதிப்பு
திருக்கோவிலூர், மே 13: திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் பாவாடை மகன் ஆதிமுத்துவுக்குச் சொந்தமான வீடு கோவிலுக்கு அருகே உள்ளது. கிராமத்தினர் பொதுக்கூட்டம் போட்டு, அந்த வீட்டின் ஒரு பகுதியினை
திருக்கோவிலூர், மே 13: திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் பாவாடை மகன் ஆதிமுத்துவுக்குச் சொந்தமான வீடு கோவிலுக்கு அருகே உள்ளது. கிராமத்தினர் பொதுக்கூட்டம் போட்டு, அந்த வீட்டின் ஒரு பகுதியினை கிராம நலனுக்காகக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். பல கட்டப் பேச்சுவார்த்தையை அடுத்து, ஒரு நாள் அந்த இடத்தை கிராமத்தினர் இடித்துவிட்டனர். இதை அடுத்து, ஆதிமுத்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போலீஸார், இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த மணி, முருகன், அருணாசலம் ஆகிய மூவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதனைக் கேள்வியுற்ற கிராமத்தினர் ஒன்று திரண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். காவல் துறையினர் குறிப்பிட்ட ஒருவருக்கு ஆதரவாக நடவடிக்கை எடுப்பது தவறு என்று கூறி போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை மாலை பொதுக்கூட்டம் போட்டு, தீர்வு காணலாம் என்று கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.