அம்பையில் கார்த்திக் கட்சியினர் மறியல்: 27 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை பரமக்குடி சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை பரமக்குடி சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
அக்டோபர் மாதம் 30 ம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜயந்தி குருபூஜையில் பங்கேற்ற மூவர் பரமக்குடி அருகே படுகொலை செய்யப்பட்டனர். மேலும் மதுரை பெட்ரோல் பல்க் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 5 பேர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் பிரதான சாலையில் பூக்கடை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அவர்கள் அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் எம். குவைத்குமார் தலைமையில் ஆர்ச் அருகில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
இந்த மறியலில் கட்சியின் அம்பாசமுத்திரம் ஒன்றிய விவசாய சங்க தலைவர் கல்யாணராமன், விக்கிரமசிங்கபுரம் நகர செயலர் மணிகண்டன், கடையம் ஒன்றியச் செயலர் துரை, சிவந்திபுரம் கிளைச் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 27 பேரை போலீஸார் கைது செய்தனர்.