முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குடியில் போலீஸார் அடக்குமுறை: ஜி. ராமகிருஷ்ணன் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி உள்ளிட்டோர் மீது அடக்குமுறையை ஏவிவிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 8 நவம்பர், 2012 at 7:08 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:01 AM

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி உள்ளிட்டோர் மீது அடக்குமுறையை ஏவிவிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த இப்ராகீம் ஷா என்பவர் சாய் காவியன் என்று பெயரை மாற்றி, சென்னையில் காஞ்சனா என்ற பெண்ணை 2006-ல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தீபேஷ் என்ற 5 வயது மகன் இருக்கிறான். திருமணத்தின் போதும் அதற்கு பிறகும் 85 பவுன் நகைகள், ரூ. 25 லட்சம் ரொக்கம், கார் ஆகியவற்றை வரதட்சணையாகப் பெற்ற சாய் காவியன், ஓராண்டுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Advertisement

இதனால், ஆலங்குடியில் உள்ள கணவர் வீட்டு முன்பு காஞ்சனா 13 நாள்கள் சத்தியாகிரகம் செய்திருக்கிறார். அதன் பிறகும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் சாய் காவியனை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் தொடர்ந்து போராடி வந்தன.

இந்நிலையில், காஞ்சனாவை ஆலங்குடியில் உள்ள அவரது கணவர் வீட்டில் குடியேற்றும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினரும், ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான உ. வாசுகி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகர், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் சின்னதுரை உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததுடன் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளனர். இது சட்டவிரோதமாகும். மார்க்சிஸ்ட் முன்னணித் தலைவரான உ. வாசுகி உள்ளிட்டோர் மீது ஆண் போலீஸாரை வைத்து அடக்குமுறை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. இந்த அராஜகத்தை நிகழ்த்திய காவல் துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.